< Back
மாநில செய்திகள்
சவுக்கு சங்கர் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு
மாநில செய்திகள்

'சவுக்கு சங்கர்' மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
5 Aug 2022 3:19 AM GMT

நீதித்துறை குறித்து தெரிவித்த அவதூறு கருத்து தொடர்பாக சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை:

யூடியூபர் மாரிதாஸ் மீது பதிவான வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

சமூகவலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை கூறிவரும் சவுக்கு சங்கர், இந்த தீர்ப்பு குறித்தும், நீதிபதி பற்றியும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளதாக, அவர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த அவமதிப்பு வழக்குபதிவு செய்த பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் என்று அவர் மீது மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் கிரிமினல் அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு ஊழியராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்கர் என்ற சவுக்கு சங்கர், கடந்த 22-ந்தேதி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தபோது, ஒட்டுமொத்த உயர் நீதித்துறையும் ஊழலில் சிக்கியுள்ளது என கூறியுள்ளார்.

எனவே அவர் மீது ஏன் கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என்பதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்