< Back
மாநில செய்திகள்
ஆவணி மூலத்திருவிழாவில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
மதுரை
மாநில செய்திகள்

ஆவணி மூலத்திருவிழாவில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை

தினத்தந்தி
|
20 Aug 2023 8:15 PM GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடந்தது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடந்தது.

ஆவணி மூலத் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30- ந் தேதி தேதி வரை நடக்கிறது. ஆவணி மூல திருவிழாவில் முக்கிய திருவிளையாடல் லீலை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகின்றன. அதில் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை விழா நடந்தது. விழாவில் இரவு 7 மணிக்கு சுவாமி பூதவாகனம், அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வந்தனர்.

விழாவில் சுவாமி நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை நிகழ்ச்சி குறித்த புராண வரலாறு வருமாறு:

மதுரைக்கு தெற்கே ஒரு குளத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்கு சென்றது. அப்போது அந்த குளத்தில் முனிவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மேலும் அந்த குளத்தில் இருந்த மீன்கள் முனிவர்கள் மீது புரண்டு விடியது. அதை கண்ட நாரை அந்த மீன்களை உண்ணக்கூடாது என்று நினைத்து சாப்பிடாமல் இருந்தது.

நாரை முக்தி பெற்றது

அப்போது அங்கிருந்த முனிவர்கள் பேசும் போது, மதுரையை பற்றியும் அங்கிருந்த பொற்றாமரை குளத்தின் சிறப்பை பற்றியும் தெரிவித்தனர். உடனே நாரை மதுரைக்கு வந்து பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்தி பெற்றது. அப்போது நாரை இறைவனிடம் பொற்றாமரைக்குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது.

அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் பொற்றாமரைக்குளத்தில் இருக்கக்கூடாது என்று இறைவனிடம் வரம் வாங்கியது. நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்று புராணம் கூறுகிறது.

மேலும் செய்திகள்