< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக சரிவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக சரிவு

தினத்தந்தி
|
12 Sep 2022 4:22 AM GMT

மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் ஏற்கனவே காவிரியில் வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 60 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 50 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

அதன்படி அணையில் இருந்து இன்று காலை 40 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 17 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் , 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஒடுகிறது.

மேலும் செய்திகள்