< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக சரிவு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக சரிவு

தினத்தந்தி
|
10 Sep 2022 4:55 AM GMT

நேற்று காலை விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் ஏற்கனவே காவிரியில் வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வருகிறது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 65 அயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால்அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

அதன்படி அணையில் இருந்து இன்று காலை 65 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 42 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் , 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுவதால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் குளிக்கவும், துணி துவைக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

மேலும் செய்திகள்