< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக சரிவு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக சரிவு

தினத்தந்தி
|
13 Sep 2022 4:01 AM GMT

மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் மாலை 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

அதன்படி அணையில் இருந்து இன்று காலை 30 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 7 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கால்வாயில் கடந்த சில நாட்களாக 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்