< Back
மாநில செய்திகள்
மகனை கடப்பாரையால் குத்திக் கொன்ற தந்தை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மகனை கடப்பாரையால் குத்திக் கொன்ற தந்தை

தினத்தந்தி
|
24 Aug 2022 5:02 PM GMT

கச்சிராயப்பாளையம் அருகே மகளிடம் தகராறில் ஈடுபட்டதால் மகனை கடப்பாரையால் தந்தை குத்திக்கொன்றார்

கச்சிராயப்பாளையம்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மீன்பிடி தொழிலாளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மயில்(வயது 50). இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிக்குமார் (27) என்ற மகன் உள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரா இறந்துவிட்டதால் வசந்தா என்பவரை மயில் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா(23), தீபிகா(15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் திருமணம் ஆன திவ்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தனது தாய் வீடான எலியத்தூரில் கைக்குழந்தையுடன் இருந்தார்.

அடிக்கடி தகராறு

இந்த நிலையில் சசிக்குமாருக்கும், திவ்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த சமயத்தில் கேரளாவில் இருந்து மயில் வீட்டிற்கு வந்தார். அப்போதும், அண்ணன், தங்கை இடையே தகராறு ஏற்பட்டது. இதை மயில் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் அண்ணன், தங்கை இடையே வாய்த்தகராறு நடந்தது. இதில் ஆத்திரமடைந்த மயில், சசிக்குமாரை கண்டித்துள்ளார். அப்போது தந்தை, மகனுக்கு இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது மயில் வீட்டில் இருந்த கடப்பாரையால் மகன் சசிக்குமாரின் கண்ணில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சசிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மயிலை கைது செய்தனர்.

அண்ணன், தங்கை தகராறில் மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்