< Back
மாநில செய்திகள்
இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி: விக்கிரவாண்டி மக்கள் எடுத்த முடிவு தவறானது - பா.ம.க. வழக்கறிஞர் பாலு ஆவேசம்
மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி: "விக்கிரவாண்டி மக்கள் எடுத்த முடிவு தவறானது" - பா.ம.க. வழக்கறிஞர் பாலு ஆவேசம்

தினத்தந்தி
|
13 July 2024 10:13 AM GMT

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிபெற்றுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம்தேதி நடைபெற்றது.

மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும். ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. முதலில் அஞ்சல் வாக்குகளை கொண்ட பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் பிரிக்கப்பட்டு, 50 எண்ணிக்கை கொண்டு கட்டுகளாக கட்டப்பட்டு பின்னர் எண்ணப்பட்டன. இந்த பணிகள் முடிந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இறுதியாக வெளியாகி உள்ள முடிவுகளின்படி, தி.மு.க. 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகளும், பா.ம.க. 56 ஆயிரத்து 296 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 602 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வழக்கறிஞர் பாலு, "விக்கிரவாண்டி மக்கள் எடுத்த முடிவு தவறானது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் கொடுத்தது. பரிசுப்பொருட்கள் மூலமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.வுக்கு தோல்வி பயத்தை பா.ம.க. ஏற்படுத்தியது. இடைத்தேர்தலில் தோல்வி பயத்தை தி.மு.க.விற்கு ஏற்படுத்த முடிந்தது என்பதே மனநிறைவு. அப்பாவி மக்களிடம் ரூ.1,000, ரூ.500 காட்டி அவர்களை ஏமாற்றி தி.மு.க. வாக்கை பெற்றுள்ளது. இதற்காக பெருமைப்படக்கூடாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வாக்குகளும் பா.ம.க.வுக்கு வந்துள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்