< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்

குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை

தினத்தந்தி
|
26 Jan 2023 6:30 PM GMT

அரியலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ரமணசரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் கலெக்டர் ரமணசரஸ்வதி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் பறக்கவிட்டனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் ரமணசரஸ்வதி திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து, சிறப்பாக பணிபுரிந்த 32 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கி பாராட்டினார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் என மொத்தம் 162 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதன்பின்னர் 46 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 21 ஆயிரத்து 888 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் 6 பள்ளிகளை சேர்ந்த 321 மாணவ-மாணவிகளின் தேசப்பற்று தொடர்பான கலை நிகழ்ச்சியை நடத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். முடிவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை கலெக்டர் நட்டு வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கலைவாணி, போலீசார் மற்றும் அனைத்து அரசுத்துறைகளை சேர்ந்த அலுவலர்கள், நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்