< Back
மாநில செய்திகள்
மொபட் மீது கார் மோதி புதுமாப்பிள்ளை பலி
சிவகங்கை
மாநில செய்திகள்

மொபட் மீது கார் மோதி புதுமாப்பிள்ளை பலி

தினத்தந்தி
|
29 Oct 2022 6:45 PM GMT

காரைக்குடி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

கார் மோதியது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நெற்புகப்பட்டியை சேர்ந்தவர் மதன் (வயது 34). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இவர் காரைக்குடியை சேர்ந்த நதியா என்ற பெண்ணை சில நாட்களுக்கு முன்புதான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று இருவரும் காரைக்குடி வந்து விட்டு மொபட்டில் நெற்புகப்பட்டியை நோக்கி சென்றனர். ஆவுடைப்பொய்கை அருகே சென்ற போது எதிரே புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த கார் மொபட்டின் மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.

புதுமாப்பிள்ளை சாவு

இந்த விபத்தில் மதனும், நதியாவும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மதன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

நதியாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரில் வந்த முன்னாள் படை வீரர் முருகேசன் (45) மீது குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்