< Back
மாநில செய்திகள்
தொட்டிலில் கழுத்து இறுக்கி சிறுவன் பலியான சோகம்!
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

தொட்டிலில் கழுத்து இறுக்கி சிறுவன் பலியான சோகம்!

தினத்தந்தி
|
11 Jun 2022 10:13 AM GMT

குன்றத்தூர் அருகே பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் கழுத்து தொட்டிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பூந்தமல்லி:

திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மகன் தீபக் (வயது 15). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் குன்றத்தூர், மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அவரது உறவினர் மணிமாறன் என்பவரது வீட்டிற்கு தம்பி விக்னேஷ் உடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார்.

மணிமாறனுக்கு குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையை தூங்க வைப்பதற்காக வீட்டினுள் புடவையால் தொட்டில் கட்டியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மணி மாறன் அவரது மனைவி குழந்தையுடன் ஹாலில் படுத்துக் கொண்டார். தீபக் அவரது தம்பி விக்னேஷ் இருவரும் தொட்டில் கட்டி உள்ள அறையில் இருந்தனர்.

மணிமாறன் அந்த அறைக்குள் இரவு எழுந்து சென்று பார்த்தபோது தீபக் குழந்தைக்கு கட்டிய புடவை தொட்டிலில் கழுத்து இறுக்கி தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தீபக்கை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்த போது குழந்தைக்கு கட்டிய புடவை தொட்டிலில் விளையாடும் போது கழுத்து இறுக்கி தீபக் இறந்து போனது தெரியவந்தது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்