< Back
மாநில செய்திகள்
உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று தொடக்கம்
மாநில செய்திகள்

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
29 Aug 2022 3:30 AM GMT

நாகை மாவட்டம் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியை ஏற்றி வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற செப்டம்பர் 7-ந்தேதி நடக்கிறது.

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது,

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக மக்கள் இன்றி வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் கலந்து கொள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 110 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார்களும், இது தவிர 5 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 200 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

27 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், 4 டிரோன் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுகாதார துறையின் மூலம் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியில் 25 டாக்டர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 71 செவிலியர்கள் உள்ளிட்ட 158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருவிழா காலங்களில் தினமும் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. திருவிழாவையொட்டி எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் 12 இடங்களில் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். . விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்