< Back
மாநில செய்திகள்
தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்

தினத்தந்தி
|
3 May 2023 7:19 PM GMT

தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.

மலைக்கோட்டை:

சித்திரை திருவிழா

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

இதில் 5-ம் நாளன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினாவதிக்கு அவளது பேறுகாலத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் நாளன்று சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து 9-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதைத்தொடர்ந்து கோவில் யானை லட்சுமி செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் ஆரவாரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பினர்.

நிலையை வந்தடைந்தது

இதைத்தொடர்ந்து கீழ ஆண்டாள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் நந்திகோவில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக மீண்டும் பகல் 12.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இதையடுத்து பக்தர்கள் தேர் நிலைக்கு முன்பு தேங்காய், பழம் உடைத்து, சூடம் ஏற்றி தீபாராதனை செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். இரவு 7 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரில் இருந்து கோவிலை சென்றடைந்தனர். தேர் சென்ற பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தேரோட்டத்தையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரை சுற்றிலும் போலீசார் ஒரு வளையம் போல் கயிற்றை அமைத்து தேரை நகர்த்தி வர ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்