< Back
மாநில செய்திகள்
கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்த ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்த ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
19 Aug 2024 4:58 AM GMT

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, கலைஞருக்குப் பாராட்டு மழை பொழிந்ததற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு, தலைவர் கலைஞருக்குப் பாராட்டு மழை பொழிந்ததற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி. கூட்டாட்சி, இந்திய ஜனநாயகம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்பை நேர்த்தியாக எடுத்துரைத்தீர்கள். தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு நீங்கள் அளித்த இதயப்பூர்வமான அஞ்சலிக்கு நன்றிகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்