< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 25-ந் தேதி முதல் சோதனை ஓட்டம்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 25-ந் தேதி முதல் சோதனை ஓட்டம்

தினத்தந்தி
|
20 April 2023 7:02 AM GMT

சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையத்தில் வருகிற 25-ந்தேதி முதல் சோதனை ஓட்டம் நடக்கிறது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை கடந்த 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த புதிய அண்ணா பன்னாட்டு முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத நவீன முனையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் தமிழக கலாசாரம், புரதான நினைவுச் சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் போன்ற ஓவியங்கள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது.

தற்போதைய சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகிறது. இந்த புதிய முனையம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுண்ட்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுண்ட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் 6 கன்ேவயர் பெல்ட்டுகள், 17 அதிநவீன லிப்ட்டுகள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகளை பரிசோதனை செய்ய 3 அதி நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலைய ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம், டாக்ஸி வே போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்கள் புறப்படுவதற்கு முன் ஓடுபாதையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையத்தில் வருகிற 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) முதல் சோதனை ஓட்டம் தொடங்குகிறது. அன்று பகல் 12.55 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வரும் பங்களா ஏர்லைன்ஸ் விமானம் முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கி, பயணிகள் வருகை பகுதி வழியாக வெளியில் வருவார்கள்.

அதே விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு புதிய முனையத்தில் இருந்து டாக்காவுக்கு புறப்பட்டு செல்லும். அதைதொடர்ந்து வேறு சில விமானங்களும் சோதனை அடிப்படையில் இந்த புதிய முனையத்தில் இயக்கப்படும்.

ஆனால் சிறிய ரக விமானங்கள் மட்டுமே சோதனை காலங்களில் இங்கு வந்து செல்லும். சோதனை ஓட்டம் வெற்றி பெறும் நிலையில் வருகிற மே மாதத்தில் இருந்து இந்த புதிய முனையத்தில் பெரிய ரக மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும்.

ஏற்கனவே பழைய முனையத்தில் உள்ள விமான நிறுவன அலுவலகங்கள், அரசுத்துறைகளான போலீஸ், பாதுகாப்பு, உளவுத்துறை உள்ளிட்ட அலுவலகங்களும் இந்த புதிய முனையத்துக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக ஓட்டல் போன்றவைகளும் அமைக்கப்பட்டு 25-ந் தேதியில் இருந்து இந்த புதிய முனையத்தில் செயல்பாட்டில் இருக்கும்.

புதிய அண்ணா பன்னாட்டு முனையம் செயல்பட தொடங்கிய பிறகு ஒரே நேரத்தில் புதிய, பழைய முனையங்கள் செயல்படும். இந்த புதிய அண்ணா பன்னாட்டு முனையம் முழு செயல்பாட்டுக்கு வந்த பிறகு தற்போது உள்ள முனையம் உள்நாட்டு முனையமாக மாற்றப்படும். பின்னர் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு 2-ம் கட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்