சென்னை
சென்னையில் பயங்கரம்: தலை,கைகளை துண்டித்து வாலிபர் உடல் எரிப்பு...!
|பூந்தமல்லி அருகே தலை,கைகளை துண்டித்து வாலிபர் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கன்னபாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் அந்த குப்பைகளுக்கு அருகிலேயே சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு நபரின் உடல் தலை மற்றும் இரண்டு கைகள் இல்லாமல் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடப்பதாக வந்த தகவலையடுத்து ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய மூன்று போலீஸ் நிலைய போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் தலை மற்றும் இரண்டு கைகள் இல்லாத உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த சம்பவம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது என்று எல்லை பிரச்சினை குழப்பம் ஏற்பட்ட நிலையில் ஆவடி போலீஸ் நிலைய எல்லைக்குள் வரவில்லை என்பதால் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதையடுத்து திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி போலீசார் அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து.
பின்னர் சம்பவம் நடந்த இடம் திருவேற்காடு போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால் திருவேற்காடு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்,
கொலை செய்யப்பட்ட நபர் ஆண் என்பதும், இருபது முதல் முப்பது வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி கொலை செய்யப்பட்ட நபரின் தலை மற்றும் இரண்டு கைகள் துண்டித்து கொடூரமாக கொலை செய்து உடலை மட்டும் இங்கு கொண்டு வந்து போட்டு தீ வைத்து கொளுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபரின் தலை மற்றும் கைகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.