< Back
மாநில செய்திகள்
காசி விஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
திருவாரூர்
மாநில செய்திகள்

காசி விஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

தினத்தந்தி
|
22 Jun 2023 6:45 PM GMT

காசி விஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

திருமக்கோட்டை அருகே மேலநத்தம் கிராமத்தில் உள்ள காசிவிஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே மேலநத்தம் கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு விசாலாட்சி அம்மன், முத்துமாரியம்மன் தனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்கள். இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடந்து வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யாக சாலைபூஜைகள்

குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர்.

யாக சாலை பூஜையின் முடிவில் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் காலை 10.30 மணிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. அப்போது கருடன் வட்டம்மிட்டதால் பக்தர்கள் பரவசத்துடன் சரண கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகள்

குடமுழுக்கு விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. மாலை தப்பாட்டம், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சாமி வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டினர் சந்திரன், திருவேங்க மூர்த்தி, ஜெயகாந்தன், அன்பழகன், பாலு, போஸ்ராஜன், கருணாநிதி, பழனித்துரை, நேரு, ராஜமூர்த்தி, பாலு, வடிவேல், மணிவண்ணன், கோபு, ஆறுமுகம், திருமூர்த்தி, கண்ணன், செல்வகுமார், விமலசிங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்.

விழாவையொட்டி சுகாதார பணிகளுக்கான ஏற்பாடுகளை மேலநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா தனபாலன் செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமக்கோட்டை போலீசார் செய்திருந்தனர். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்