< Back
மாநில செய்திகள்
ஆடிப்பெருக்கையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடுதீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
தர்மபுரி
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடுதீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

தினத்தந்தி
|
3 Aug 2023 7:00 PM GMT

ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தீமிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஆடிப்பெருக்கு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி நேற்று அதிகாலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தர்மபுரி நகரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து நடந்த திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓம் சக்தி மாரியம்மன்

தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவில், வேல்முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், கடைவீதி மருதவாணேஸ்வரர் உடனாகிய அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பிரசன்ன வெங்கடரமண சாமி கோவில், எஸ்.வி.ரோடு சாலை விநாயகர் கோவில், ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர்

வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக ரெயில் மூலம் சென்ற ஏராளமான வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம்-தர்மபுரி இடையே சாலை மார்க்கமாக கார்களில் சென்ற பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோன்று காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி அஷ்டவராகி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். குறிப்பாக ஏராளமான புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல் தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்தி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அஷ்டவராகி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தீமிதி விழா

தர்மபுரி அருகே நல்லகுட்லஅள்ளி நடூர் கிராமத்தில் உள்ள துரோபதையம்மன் அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றன. பின்னர் தீமிதி விழா நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி சக்தி கரகத்துடன் முதலில் தீ மிதித்தார். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கைக்குழந்தையுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்