< Back
மாநில செய்திகள்
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
16 May 2024 9:41 AM GMT

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசின் கைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு சிக்கி சீரழிந்து வருவதோடு, தமிழக மக்களும் பல்வேறு வகைகளில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தமிழக மக்களின் நலன்களை, உரிமைகளை தங்களின் சுயநலத்திற்காகவும், தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும் அண்டை மாநிலங்களிடம் அடகு வைத்துவிட்டது இந்த தி.மு.க. அரசு.

கர்நாடகத்தில் தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில்கூட, காவிரியில் தமிழகத்திற்குண்டான உரிமை நீரை கேட்டுப் பெறாமல் கபட நாடகம் ஆடி வருகிறார் பொம்மை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் முறைபடுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்பதை இந்த தி.மு.க. அரசு தடை விதித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு மாதமும் முறைப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகளை, முறைபடுத்தும் குழு வழங்க வேண்டும். இந்த அமைப்புகளின் கூட்டங்கள் டெல்லியில் நடைபெறுவது வழக்கம்.

இதில் உறுப்பினர்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லி சென்று கூட்டத்தில் பங்கேற்று தங்களது மாநிலங்களின் கருத்துகளை வலியுறுத்துவார்கள். தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி செல்லாமல், ஆன்லைன் வாயிலாக காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நீர்வளத்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தைவிட, காவிரி நீர் முறைபடுத்தும் கூட்டத்தில்தான் திடமான விவாதங்கள் நடத்தி தமிழகத்தின் உரிமையைக் காக்க முடியும். தி.மு.க. அரசு பதவியேற்றதில் இருந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் இந்தக் கூட்டங்களில் தமிழகத்தின் உரிமைகளைப் பெரிதாக விவாதிப்பதில்லை என்று சக அதிகாரிகளே குற்றம் சாட்டுவதாகச் செய்திகள் வருகின்றன.

கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகப் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே, மேகதாது அணை கட்டுமான பிரச்சினையை மத்திய நீர்வளத்துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியது. அதை அப்போதே நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற நீர்வளத்துறைச் செயலாளர் ஏமாற்றப்பட்டதாக, நீர்வளத்துறை அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். நேரில் பங்கேற்கும்போதே இந்த நிலை என்றால், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் போது, தமிழகத்தின் உரிமைக் குரல் முழுமையாக ஒலிக்குமா என்று டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டிய இந்த ஏமாற்று மாடல் அரசு, இனி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது. தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசின் கால்களில் அடமானம் வைத்துவிட்டு, தங்களது குடும்பத்தினருடைய தொழில்களை எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்த நினைக்கும் இந்த கபட நாடக தி.மு.க. அரசை கடுமையாகக் கண்டிக்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்