< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா

தினத்தந்தி
|
7 Oct 2022 8:52 PM GMT

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா

அழகர்கோவில்,

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடந்தது.

புரட்டாசி பெருந்திருவிழா

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவிலானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலாகும். இந்த கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் உற்சவர் பெருமாள், தேவியர்களுடன், முன் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் குவிந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர், தொடர்ந்து காலையில் கிருஷ்ணாவதாரமும், மாலையில் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் காலையில் ராமாவதாரமும், இரவு அனுமார் வாகனத்திலும், பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடந்தது. 40ம் நாள், காலை கஜேந்திர மோட்சமும், இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், கடந்த 1-ந் தேதி ராஜாங்க சேவையும், இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருள்வதும், 6- ம் நாள் காலையில் காளிங்க நர்த்தனமும், இரவு மோகனாவதாரத்தில் எழுந்தருள்வதும் தொடர்ந்து யானை வாகனத்திலும் புறப்பாடும் நடைபெற்றது.

7-ம் திருநாள் காலையில் சேஷசயனமும், மாலையில் புஷ்ப விமானமும், 8-ம் திருநாள், காலையில் வெண்ணெய் தாழியும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 9-ம் திருநாள் காலையில் திருத்தேரும், இரவு பூப்பல்லக்கும், 10-ம் நாள் காலையில் திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு பெருமாள் பூச்சப்பரத்தில் எழுந்தருளினார்.

தெப்ப திருவிழா

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 11-ம் நாள் காலை 9.55 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் அன்னப்பல்லக்கில் தேவியர்களுடன் பெருமாள், தெப்பத்தில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வலம் வந்தார். பின்னர் மேற்கு பக்கத்தில் உள்ள மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார், அங்கு பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அதே போல் மாலை 6 மணிக்கும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று(சனிக்கிழமை) 12-ம் நாள் காலை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், செய்திருந்தனர். முன்னதாக தல்லாகுளம் தெப்பகுளத்திற்கு அரசு உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாக அனுமதியின் பேரில், நடைபெற்ற தெப்ப திருவிழாவிற்காக முல்லை பெரியாறு கால்வாய் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டு விழா நடந்தது.

மேலும் செய்திகள்