
சேலம்
மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்

சேலம் தெற்கு மின் கோட்டம் வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றியவர் சுகவனம் (வயது 52). இவர் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட வெட்டுக்காட்டில் ஏற்கனவே புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்து வந்தார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து அந்த பணியை விரைந்து முடிக்க ஆட்டையாம்பட்டி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேமாவுக்கு உத்தரவிடப்பட்டது.
அவரது நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க சுகவனம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இதர பிரிவு உதவி பொறியாளர் மூலம் அந்த பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இதுதொடர்பான அறிக்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பு செய்த மின்வாரிய உதவி பொறியாளர் சுகவனம் மற்றும் போர்மேன் கண்ணன் ஆகியோரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மின்வாரியத்தின் சேலம் வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணி உத்தரவிட்டார்.