< Back
மாநில செய்திகள்
சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
அரியலூர்
மாநில செய்திகள்

சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
7 Jun 2022 7:25 PM GMT

சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து கிராம முக்கியஸ்தர்கள், நாட்டாமைக்காரர்கள் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருப்பணிகளை மேற்கொண்டனர். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை(வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. பின்னர் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. நேற்று முன்தினம் தீர்த்தசங்கிரகணமும், நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்துசாந்தி செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

இன்று(புதன்கிழமை) காலை 7 மணி அளவில் கணபதி பூஜையுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன. மாலை 5 மணி அளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. நாளை காலை 5 மணி அளவில் லட்சுமி, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு காலை 8.45 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 9 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், மங்கள தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன. இதனால் அந்த கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மிக பெரியவர்கள் கலந்து கொள்கின்றனர். போலீசார், தீயணைப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகள் கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்