< Back
மாநில செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் சூரிய வழிபாடு
திருச்சி
மாநில செய்திகள்

காசி விஸ்வநாதர் கோவிலில் சூரிய வழிபாடு

தினத்தந்தி
|
24 Aug 2023 9:51 PM GMT

காசி விஸ்வநாதர் கோவிலில் சூரிய வழிபாடு நடந்தது.

பொன்மலைப்பட்டி:

திருச்சி கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் சென்றநேரத்தில் சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியபோது, இறைவன் அவரது கனவில் தோன்றி கோவில் அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியில் இருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு, கோவில் கட்டியதாகவும், அதன்பின்னரே கல்லணை கட்டப்பட்டதாகவும் வரலாறு. இத்தகைய சிறப்பு வாய்ந்ததும், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலின் சார்பு கோவிலுமான இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் சூரியபூஜை சிறப்பு வாய்ந்தது. அதாவது ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ந் தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழும். அப்போது இறைவனை வழிபாடு செய்தால் திருமணத்தடை, பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இந்நிலையில் ஆவணி மாதம் 7-ந் தேதியான நேற்று காசி விஸ்வநாதர் கோவிலில் சூரியக்கதிர்கள் மெல்ல, மெல்ல வந்து மூலவரை ஒளிக்கற்றைகளால் பிரதிபலிக்கச் செய்து, சூரிய வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 3 நாட்கள் சூரியோதயத்தின்போது வழிபாடு நடைபெறுவதால் இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) கோவிலில் தங்கி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

மேலும் செய்திகள்