< Back
மாநில செய்திகள்
பொங்கல் தொகுப்புடன் கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

தினத்தந்தி
|
23 Dec 2022 12:55 PM GMT

தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் ஒரு கரும்பு, பனை வெல்லம் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம், பல்லி இருந்த புளி, பருத்திக்கொட்டை கலந்த மிளகு வழங்கி மாபெரும் சாதனை புரிந்தது திறனற்ற தி.மு.க. அரசு. இந்த ஆண்டு மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் தரமற்ற பொங்கல் பரிசை தவிர்த்தமைக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள 2.16 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 356.67 கோடி செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்ற செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1,000, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்தால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த திறனற்ற தி.மு.க. அந்த வாக்குறுதியை மறந்தது மட்டும் அல்லாது அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது தேசிய உழவர் தினமான இன்று தி.மு.க. விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.

அரசு கொள்முதலை எதிர்நோக்கி இருந்த விவசாயிகளின் நிலையை பற்றி தி.மு.க.வுக்கு என்ன கவலை. சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்த கூட்டத்துக்கு விவசாயியின் வலி என்ன தெரியும்?

ஒரு கிலோ அரிசி ரூ.21-க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ.31-க்கும் கொள்முதல் செய்யும் தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பில் இந்த பொருட்களின் விலை ரூ.76 என்று கணக்கு காட்டி உள்ளதையும் இந்த அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், இன்றைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வரும் இப்போது அந்த கோரிக்கையை மறந்துவிட்டார்கள் போல.

கொடுத்த வாக்குறுதிகளை மறந்த இவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை மட்டும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது?.

பனை வெல்லம், பனை பொருட்களை நியாய விலை கடைகளில் வினியோகம் செய்வோம் என்று அறிவிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு வருடமாக உறங்கி கொண்டிருக்கிறது இந்த திறனற்ற தி.மு.க. அரசு.

அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் கோரிக்கை ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்