< Back
மாநில செய்திகள்
நிதி நிறுவன மோசடி வழக்கில் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
மாநில செய்திகள்

நிதி நிறுவன மோசடி வழக்கில் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
20 Nov 2023 8:11 PM GMT

நிதி நிறுவன மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையில், வைப்பீடுகள் வாயிலாக பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.

சென்னை,

சென்னை அடையாறு காந்தி நகரில், 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம் சொன்னபடி வட்டி வழங்கவில்லை. முதலீடுகளை பெற்று மோசடி செய்தது. இதுகுறித்து வேளச்சேரியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர், போலீசில் கடந்த 2013-ம் ஆண்டு புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், நிதி நிறுவனம் மற்றும் அதன் 17 துணை நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் சுபிக்ஷா சுப்பிரமணியன், ஸ்ரீவித்யா, நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், '587 முதலீட்டாளர்கள் புகார்களின்படி, 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வைப்பீடுகள் வாயிலாக, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது' என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இயக்குனர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் இறந்துவிட்டனர். தலைமறைவான இயக்குனர் அப்பாதுரையை, தேடப்படும் நபராக சிறப்பு கோர்ட்டு அறிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்கள் டி.பாபு, எம்.இ.வி.துளசி ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கருணாநிதி, இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில், ''இயக்குனர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன். இயக்குனர் ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இயக்குனர்கள், ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களுக்கு மொத்தம் 191 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையில், ரூ.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். இயக்குனர்கள் ராகவன், மோகன் ராமசாமி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இறந்து விட்டதால், அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுகிறது."

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்