தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் அருகே பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவ,மாணவிகள்
|ஓட்டப்பிடாரம் அருகே பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவ,மாணவிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவ, மாணவிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
படிக்கட்டுகளில் பயணம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கோவில்பட்டிக்கு சென்று பயின்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகள் கோவில்பட்டியில் இருந்து புதியம்புத்தூர் வரை செல்லும் அரசு பஸ்களில் சென்று வருகின்றனர்.
இதே போன்று பசுவந்தனை அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளும் அதே பஸ்சில் பயணித்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் அரசு பஸ்சில் பயணிப்பதால் அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் அபாய நிலை தொடர்கிறது.
பஸ்களில் சோதனை
எனவே விபத்து நடப்பதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் பசுவந்தனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மார்த்தாண்ட பூபதி தலைமையில் போலீசார் பசுவந்தனை பகுதியில் நேற்று பஸ்களில் சோதனை நடத்தினர்.
போலீசார் எச்சரிக்கை
அப்போது பசுவந்தனை பகுதியில் வந்த ஒரு பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ, மாணவிகள் பயணித்ததை கண்டனர். அந்த பஸ்சை நிறுத்தக்கூறிய போலீசார், மாணவ-மாணவிகளை கீழே இறக்கினர். அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணித்தால் உயிர்ப்பலி ஏற்படும், எனவே இதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் இதை மீறி படியில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-----------