< Back
மாநில செய்திகள்
தர்பூசணி பழங்களில் ரசாயணம் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
மாநில செய்திகள்

'தர்பூசணி பழங்களில் ரசாயணம் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

தினத்தந்தி
|
15 March 2024 3:14 PM GMT

தர்பூசணி பழங்களில் சிலர் ஊசி மூலம் சிவப்பு நிறத்தை ஏற்றுகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்களின் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தர்பூசணி பழங்களில் ரசாயணம் கலந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சுற்றுலா தளங்களில் போலி குளிர்பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சீசனுக்கு ஏற்றது போல் மாம்பழம், வாழைப்பழங்களில் கல் வைத்து பழுக்க வைப்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தர்பூசணி பழம் சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் ஊசி மூலம் நிறத்தை ஏற்றுகிறார்கள். அதனை சாப்பிட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு நானே ஒருமுறை பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது குறித்து அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். எங்காவது கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்