< Back
மாநில செய்திகள்
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு..? - அறிக்கை தர ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு..? - அறிக்கை தர ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
15 July 2024 12:03 PM GMT

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது.

அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு குறித்த சி.பி.ஐ. விசாரணை சரியில்லை என்றும் இத்தனை ஆண்டுகளாகியும் பலன் இல்லை. ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது. விசாரணை முடிவு பற்றி எந்த கவலையும் இல்லாமல் விசாரணை நடத்தினால் அறிக்கை நியாயமானதாக இருக்காது என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்