< Back
மாநில செய்திகள்
பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் : அமைச்சர் சேகர்பாபு
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் : அமைச்சர் சேகர்பாபு

தினத்தந்தி
|
15 July 2022 11:13 AM GMT

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2022 -2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு அம்மன் கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் உள்ளிட்ட 9 கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், சென்னையில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருக்கோவில், மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும், செயல்படுத்தப்படும்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட 8 கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவில், திருக்கருக்காவூர் கற்பகராட்சாம்பிகை கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 10 கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளிட 6 கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும். இந்த ஆன்மிக சுற்றுலா பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம் வழங்கப்படும். திருக்கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் சுற்றுலா தொடர்பாக சுற்றுலாத்துறையில் பதிவு செய்தல் வேண்டும். மேலும் இது தொடர்பாக www.ttdconline.com சுற்றுலா இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்