< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
8 Oct 2022 7:00 PM GMT

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணியளவில் மூலவருக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம், ராஜ அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவருக்கு புஷ்ப அலங்காரம், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. மாலையில் பஜனை பாடல்கள் பாடப்பட்டு, சிறுவர்-சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.

வரதராஜ பெருமாள்

அதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் எம்.வி.எம். நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மேலும் முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோவில், கோபாலசமுத்திரம் பாலஆஞ்சநேயர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களிலும் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபால்பட்டி, வேடசந்தூர்

கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் நேற்று கதிர்நரசிங்க பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா...! கோவிந்தா...! என கோஷமிட்டு வழிபட்டனர். வேடசந்தூர் அருகே உள்ள சேணன்கோட்டை ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி 54 அடி உயர ராமபக்த ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது. அதையடுத்து பழங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பழங்களால் கோலமிடப்பட்டது. விழாவில் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பழனி

பழனி மேற்கு ரதவீதியில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் துளசி மாலை வாங்கி வந்து சுவாமிக்கு சாற்றி வழிபட்டனர்.

இதேபோல் பெரியகடைவீதி பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், கரடிக்கூட்டம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில், ராமநாதன்நகர் லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்