< Back
மாநில செய்திகள்
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
13 Aug 2022 1:36 PM GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் 17-ந் தேதி தொடங்குகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் 17-ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொழில் கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமானது மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதி கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டு மாநில அரசின் மூலமாக இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.‌ இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

வேலூர் காந்திநகர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

மானியம்

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்