< Back
மாநில செய்திகள்
மொடக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் சாவு
ஈரோடு
மாநில செய்திகள்

மொடக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் சாவு

தினத்தந்தி
|
19 Aug 2022 9:13 PM GMT

மொடக்குறிச்சி அருகே பாம்பு கடித்ததில் பெண் பரிதாபமாக இறந்தார்.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே பாம்பு கடித்ததில் பெண் பரிதாபமாக இறந்தார்.

பாம்பு கடித்தது

மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 30). அவருடைய மனைவி திவ்யபாரதி (28). இந்த தம்பதிக்கு 3 வயதில் புகழ் என்கிற மகன் உள்ளார்.

இந்த நிலையில் திவ்யபாரதி நேற்று காலை வீட்டு் வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அருகே உள்ள புதரில் இருந்து கோதுமை நாகப்பாம்பு ஒன்று அங்கு திடீரென ஊர்ந்து வந்தது. பின்னர் அந்த பாம்பு திவ்யபாரதியின் வலது கையில் கடித்துவிட்டு அங்கிருந்து வேகமாக ஊர்ந்து சென்று மறைந்துவிட்டது.

இதில் அவரது கையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதனால் வலியால் அவர் அலறி துடித்தார்.

பெண் சாவு

சத்தம்கேட்டு வீட்டுக்குள் இருந்த ரகுநாதன் ஓடி வந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கணபதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் திவ்யபாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்டது

இதைத்தொடர்ந்து பாம்பு பிடி வீரர் நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த யுவராஜுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கு வந்து பாம்பை தேடி பார்த்தார்.

அப்போது வீட்டு முன்பு உள்ள ஒரு கல்லுக்கு அடியில் பாம்பு சுருண்டபடி கிடந்தது. உடனே யுவராஜ் அந்த பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது பாம்பு படமெடுத்து ஆடியது. சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர் அவர் கூறும்போது, 'பிடிபட்டது சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு' என்றார். அதைத்தொடர்ந்து அந்த பாம்பை ஒரு பையில் போட்டு அறச்சலூர் வனப்பகுதியில் கொண்டு் சென்றுவிட்டார். அப்போது பாம்பு சீறிப்பாய்ந்து சென்றது.

மேலும் செய்திகள்