< Back
மாநில செய்திகள்
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
19 July 2023 8:35 PM GMT

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் கூறினார்.


கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் கூறினார்.

திறன் பயிற்சி

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான கழகமானது கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து 3 மாத கால திறன் பயிற்சியை நடத்துகிறது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. படித்திருக்கலாம்.

18 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகிய பயிற்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பயிற்சி நிலையம்

ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல்.அன்.டி. கட்டுமான பயிற்சி நிலையம் இருவரும் சேர்ந்து நடத்துகின்றனர். பயிற்சி காலம் 7 நாட்களுக்கு வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் இடம் தையூரில் அமைய உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

18 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும் பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். 3 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி. பயிற்சியாளர்களுக்கு தினமும் வேலை இழப்பை ஈடு செய்ய ரூ.800 வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்

தமிழ்நாடு கட்டுமான கழகம் எல்.அன்.டி. கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து விவரங்கள் அறிய சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்