< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா

தினத்தந்தி
|
1 Jun 2022 1:12 PM GMT

திருவண்ணாமலையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி திருநகர் பகுதியில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர் விளையாட்டு பூங்கா

திருவண்ணாமலை நகராட்சி திருநகர் பகுதியில் கடந்த 2016-17-ம் ஆண்டு நிதி திட்டத்தின் மூலம் ரூ.49 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பூங்காவிற்குள் சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. மேலும் வண்ண மின் விளக்குகளும், நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதைகளும் உள்ளன. தற்போது இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.

நீண்ட நாட்களாக இந்த பூங்கா பூட்டியே கிடப்பதால் இங்கு மதுபிரியர்கள் வந்து மதுகுடித்து செல்வதாகவும். சில சமயங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் மக்களிடம் கேட்ட போது, இந்த பூங்கா கட்டி முடிக்கப்பட்ட புதிதில் மின் விளக்குகளுடன் அழகாக காணப்பட்டது. சில நாட்களே திறந்து இருந்தது. பின்னர் மூடப்பட்டது.

கொரோனா பரவல் முடிந்ததால் இந்த பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாததால் இரவில் மது குடிப்பது போன்ற செயல்கள் நடக்கிறது.

நடவடிக்கை

இந்த பூங்காவை தூய்மை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் புதர் மண்டி கிடக்கும் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்