< Back
மாநில செய்திகள்
கடலூர் உழவர் சந்தை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு இடமாற்றம்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் உழவர் சந்தை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு இடமாற்றம்

தினத்தந்தி
|
11 July 2022 5:09 PM GMT

ரூ 47 லட்சத்தில் நவீனமயமாக்கும் பணி 16 ந் தேதி தொடங்குகிறது கடலூர் உழவர் சந்தை மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு இடமாற்றம் அதிகாரி அறிவிப்பு

கடலூர்

கடலூர் அண்ணா பாலம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர். இதனை வாங்கிச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி உழவர் சந்தைக்கு வருகின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால், நவீனமயமாக்க முடிவு செய்து, அதற்காக ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் வருகிற 16-ந் தேதி முதல் தொடங்குகிறது.

இதையொட்டி வேளாண் வணிக துணை இயக்குனர் பூங்கோதை, விற்பனை குழு செயலாளர் விஜயா, வேளாண்மை அலுவலர் மகாதேவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் கார்த்திகேயன், சீனிவாச பாரதி, மணியரசி மற்றும் தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஆகியோர் நேற்று உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகளிடம், உழவர் சந்தையை நவீனமயமாக்குவதற்காக, உழவர் சந்தை தற்காலிகமாக மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இட மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தனர். அதனால் அனைவரும் 15-ந் தேதி முதல் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு சென்று வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும், அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று கூறி, விவசாயிகளுக்கு உழவர் சந்தையை தற்காலிக இடமாற்றம் செய்வதற்கான துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

மேலும் செய்திகள்