புதுக்கோட்டை
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: புதுக்கோட்டை தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
|14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுக்கோட்டை தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் ஆபாசமாக பேசினார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு கணேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், பாலியல் தொல்லைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், ஆபாச வார்த்தையால் திட்டியதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், இதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதனால் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறை தண்டனையை கணேசன் அனுபவிக்க உள்ளார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க அறிவுறுத்தினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட கணேசனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.