< Back
மாநில செய்திகள்
மக்கள் நீதிமன்றம் மூலம் 2,005 வழக்குகளுக்கு தீர்வு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.35 கோடி நிவாரணம்
ஈரோடு
மாநில செய்திகள்

மக்கள் நீதிமன்றம் மூலம் 2,005 வழக்குகளுக்கு தீர்வு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.35 கோடி நிவாரணம்

தினத்தந்தி
|
11 Feb 2023 8:52 PM GMT

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2 ஆயிரத்து 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.35 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2 ஆயிரத்து 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.35 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் மாதந்தோறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடித்து வைக்கும் வகையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்தது. ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஹேமா, குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் சரவணன் ஆகியோர் பல்வேறு வழக்குகளை விசாரித்தனர்.

2,005 வழக்குகளுக்கு தீர்வு

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து பிரச்சினை வழக்கு, விபத்து காப்பீடு, காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 6 ஆயிரத்து 124 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முடிவில் 2 ஆயிரத்து 5 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.35 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரத்து 405 நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.60 லட்சம் இழப்பீட்டு தொகையினை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் வழங்கினார். இதில் சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) ராமச்சந்திரன் செய்திருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்