< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் எருமை பராமரிப்பு குறித்த கருத்தரங்கம், கண்காட்சி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் எருமை பராமரிப்பு குறித்த கருத்தரங்கம், கண்காட்சி

தினத்தந்தி
|
15 Jun 2023 11:30 AM GMT

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் எருமை பராமரிப்பு குறித்த கருத்தரங்கம், கண்காட்சியில் சிறந்த எருமை மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக திருவள்ளூர் மாவட்டம், அலமாதி, கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் எருமை பராமரிப்பு கருத்தரங்கம், பயிற்சி, கண்காட்சி மற்றும் சிறந்த எருமைகளுக்கான போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் அறிவியல் முறையில் எருமை வளர்ப்பு, வெப்ப அலர்ச்சியை கட்டுப்படுத்த எருமைகளுக்கான சிறப்பு பராமரிப்பு, எருமைகளின் இனவிருத்தி, எருமைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் தீவனங்கள், நோய்த் தடுப்பு முறைகள், எருமை கன்றுகள் பராமரிப்பு ஆகியவை குறித்து வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எருமைப் பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களான சுவையூட்டிய பால், இனிப்பு தயிர், பன்னீர், உறைவிக்கப்பட்ட பால் பொருட்கள், உணவுப் பதப்படுத்துதலில் சூரிய ஒளியின் பங்கு, பால் பொருட்களை உரிய முறையில் சந்தைப்படுத்துதல் மற்றும் சுயத்தொழில் தொடங்குதல் குறித்த வழிகாட்டு முறைகளும் துறை வல்லுனர்களால் விளக்கி எடுத்துரைக்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 8 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், ஆயிலச்சேரி கிராமத்தில் சிறந்த எருமை மற்றும் எருமை கன்றுகளுக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் சிறந்த மாடுகள், கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்