< Back
மாநில செய்திகள்
விபத்தில் பலியான வாலிபரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
தேனி
மாநில செய்திகள்

விபத்தில் பலியான வாலிபரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தினத்தந்தி
|
7 Dec 2022 4:16 PM GMT

பெரியகுளத்தில் விபத்தில் பலியான வாலிபரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரியகுளம் கீழவடகரை, பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் திவாகரன் (வயது 21). இவர் தேனியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் திவாகரன் தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லட்சுமிபுரம் அருகில் அவர் வந்தபோது, பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட திவாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து நஷ்டஈடு கேட்டு அரசு போக்குவரத்து கழகம் மீது பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சமரச பேச்சுவார்த்தைக்காக மக்கள் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் விபத்து நஷ்டஈடாக ரூ.21 லட்சத்தை திவாகரனின் குடும்பத்திற்கு வழங்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்மதித்தனர். ஆனால் இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

இதனால் பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் பழனிசாமி சார்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை கோர்ட்டு அமினாக்கள் ஜென்சி மாலதி, ரமேஷ் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வக்கீல் ரத்தினகுமார் ஆகியோர் பெரியகுளம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு மதுரை செல்வதற்கு தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்