< Back
மாநில செய்திகள்
அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு
மாநில செய்திகள்

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு

தினத்தந்தி
|
27 Jun 2024 10:21 AM GMT

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலையாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. அதிமுக நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் ஜனநாயக கோரிக்கையை நிராகரித்து, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலையாகும். பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின்இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்