< Back
மாநில செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு படை வீரர் திடீர் சாவு
மதுரை
மாநில செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு படை வீரர் திடீர் சாவு

தினத்தந்தி
|
6 Oct 2023 12:49 AM GMT

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு படை வீரர் திடீரென உயிரிழந்தார்.


நெல்லை மாவட்டம் சங்கர் நகர் குறிஞ்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முண்டசாமி (வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு, இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் இணைந்த இவர், காஷ்மீர், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி உள்ளார். இதுபோல், தேசிய பேரிடர் மீட்புப்படையிலும் பணியாற்றி இருக்கிறார். இதற்கிடையே, கடந்த வருடம், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள இடையப்பட்டி முகாமிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, அங்கு பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முகாமில் இருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அனுமதிப்பதற்காக முண்டசாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்த அவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பெற்று செல்வதற்காக இந்தோ திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று காலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பிரேத பரிசோதனை நடந்து முடிந்ததை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், முண்டசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் இடையபட்டியில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் அங்கும் அரசு மரியாதை முடிந்த பின்னர், அவரது உடல் சொந்த ஊரான நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்