திருச்சி
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
|பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொன்மலைப்பட்டி:
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
அலறல் சத்தம்...
திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷாகிதா பேகம் (வயது 34). இவர் அதே பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று காலை வழக்கம்போல் ஷாகிதா பேகம் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஷாகிதா பேகத்தின் அலறல் சத்தம் கேட்கவே அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஷாகிதா பேகத்தின் வீட்டின் பின்பக்கமாக ஓட்டை பிரித்து ஏறி குதித்து தப்பி ஓடியதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
அரிவாள் வெட்டு
மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாகிதா பேகம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஷகிதா பேகத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பொன்னி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
காதல்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஷகிதா பேகத்தின் மகளான பிளஸ்-2 மாணவியிடம் மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் ஜோசப்ராஜ் (என்கிற) மணிகண்டன் (24) பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் அந்த மாணவியை காதலித்ததாகவும், ஆனால் அவரது பெற்றோர் கண்டித்ததின் பேரில் அந்த மாணவி மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் அவரது பெற்றோரை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மணிகண்டன், அந்த மாணவியின் தாயாரான ஷகிதா பேகத்திடம் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பேசியுள்ளார். மாணவி தன்னிடம் பேச அனுமதிக்கவில்லை என்றால் கத்தியால் கையை கிழித்துக்கொள்வேன் என்று தான் வைத்திருந்த கத்தியை கையில் எடுத்து மிரட்டி உள்ளார்.
கைது
இந்தநிலையில் சமரசம் ஆகாதால் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஷகிதா பேகத்தை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக அவரை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஷகிதா பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியதால் மணிகண்டன் ஓட்டை பிரித்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை பொன்மலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.