புதுக்கோட்டை
விவசாயிக்கு அரிவாள் வெட்டு
|அரிமளம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விவசாயி
அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்புராணி மேல தெருவை சேர்ந்தவர் அய்யாவு (வயது 30), விவசாயி. இவர் தனது நண்பரான சிவா (31) உள்ளிட்ட 5 பேருடன் அங்குள்ள அன்னதான கொட்டகை கீழே கல்தளம் அமைப்பதா? அல்லது சிமெண்டு தளம் போடுவதா? என்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் சங்கர் உள்ளிட்ட 3 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவாவை வெட்ட முயன்றுள்ளனர்.
அரிவாள் வெட்டு
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அய்யாவு அவர்களை தடுத்து உள்ளார். இதில் அய்யாவு கையில் வெட்டு விழுந்தது. இதனை தொடர்ந்து சங்கர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அய்யாவுவை அருகே இருந்தவர்கள் மீட்டு கே.புதுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சங்கர் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.