< Back
மாநில செய்திகள்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
மதுரை
மாநில செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
29 Aug 2023 9:14 PM GMT

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுகள் முருகன், சாமிதுரை, போலீசார் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருப்பதால், கால அவகாசம் வேண்டும் என்று உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதியிடம் முறையிட்டார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்