பெரம்பலூர்
சங்குபேட்டை வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
|சங்குபேட்டை வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குபேட்டையில் விநாயகர், தையல் நாயகி அம்மன் உடனுறை ராமலிங்கேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள், கருடாழ்வார் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் கல்தூண் மண்டபம் புதிதாக புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி கோவிலில் நேற்று காலை 9 மணிக்கு மேல் மகா பூர்ணஹூதி நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டு, புனித நீர் அடங்கிய குடங்கள் கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவிலின் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மூலவர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சங்குபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கோவிலில் திருக்கல்யாண உற்சவமும், அதனை தொடர்ந்து மாவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடும் நடந்தது.