< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்திரூ.50 லட்சம் மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை:தேனி கோர்ட்டு தீர்ப்பு
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்திரூ.50 லட்சம் மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை:தேனி கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
23 Feb 2023 6:45 PM GMT

ஆண்டிப்பட்டியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஏலச்சீட்டு நிறுவனம்

உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 54). இவரும், இவருடைய மனைவி பரிமளா, சகோதரர்கள் செல்வராஜ், பாண்டியன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் ஆகியோர் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம் கட்டினால் அதிக பணம் கிடைக்கும் என்று துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.

அதை நம்பி பலர் இதில் முதலீடு செய்தனர். அந்த வகையில், உத்தமபாளையம் அருகே காமாட்சிபுரம் பால்பண்ணை தெருவை சேர்ந்த டேவிட் உள்பட 63 பேர் ரூ.50 லட்சத்து 46 ஆயிரத்து 430 செலுத்தி இருந்தனர். ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தியவர்கள் மோசடி செய்தனர்.

5 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவில் டேவிட் புகார் செய்தார். அதன்பேரில், மலைச்சாமி, பரிமளா, செல்வராஜ், பாண்டியன், ஒச்சப்பன் ஆகிய 5 பேர் மீதும் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விவேகானந்தன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், பாண்டியன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

7 ஆண்டு சிறை

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோவிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், இந்த மோசடியில் ஈடுபட்ட மலைச்சாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மலைச்சாமியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சரியான நேரத்தில் சமர்ப்பித்த இன்ஸ்பெக்டர் சீமைராஜ் மற்றும் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்