< Back
மாநில செய்திகள்
ஊத்தங்கரை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.8¼ கோடியில் பாலம்-அமைச்சர் காந்தி பணிகளை தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஊத்தங்கரை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.8¼ கோடியில் பாலம்-அமைச்சர் காந்தி பணிகளை தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
4 Aug 2022 5:06 PM GMT

ஊத்தங்கரை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.8¼ கோடியில் பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

ஊத்தங்கரை:

ஆற்றின் குறுக்கே பாலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா புதூர் புங்கனை ஊராட்சி ஒட்டம்பட்டி கிராமம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 26 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, கல்லாவி ஊராட்சி, பனமரத்துப்பட்டி இருளர் இன குடியிருப்பு பகுதிகளுக்கு அமைச்சர் காந்தி நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் குடிநீர் வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா, தனிநபர் வீடுகள், சாலை வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்பு பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு இருளர் இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவுகளை பரிமாறினார்.

இதன் பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கள ஆய்வு

ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே பனமரத்துப்பட்டி கிராமம், காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வசித்துவருவதாக தமிழக முதல்-அமைச்சருக்கு தகவல் வந்தவுடன், கலெக்டரை நான் தொடர்பு கொண்டு, இப்பகுதியில் நேரடியாக ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வருவாய் துறை அலுவலர்களை கொண்டு கள ஆய்வு மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.

அதன் அடிப்படையில், நானே இப்பகுதியில் பார்வையிட்டு இருளர் இன மக்களின் குறைகளை கேட்க வந்துள்ளேன். ஏற்கனவே அரசால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள 22 தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் இந்த வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு பழைய வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்ட உடனடியாக கருத்துரு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். விரைவில் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற உடன் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

வீட்டுமனை பட்டா

மேலும், வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இப்பகுதியின் அருகிலேயே வருவாய் துறை மூலம் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பாக வரும் 10 நாட்களில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து ஒரே சீராக தடையின்றி மின்சாரம் வழங்கி, தெரு விளக்குகள் அமைத்து கொடுக்கப்படும். சாலைவசதியும் ஏற்படுத்தி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஜோலார்பேட்டை தேவராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய குழு துணை தலைவர் சத்தியவாணி செல்வம், மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி, ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், மகேஷ்குமரன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி செல்வம், ஜெயராமன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்