< Back
மாநில செய்திகள்
குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
16 Nov 2022 6:44 PM GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

நூற்றாண்டு விழா

பரமக்குடி சுகாதார மாவட்டத்தின் சார்பில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா, பரமக்குடி சுகாதார மாவட்டத்தின் 30-வது ஆண்டு விழா மற்றும் மாநாட்டு தொடர் ஜோதி, உலக சாதனை முயற்சி ஆகிய விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மாவீரன் வேலுச்சாமி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர்மன்ற துணைத்தலைவர் குணா, 17-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சதீஷ்குமார், ஆயிர வைசிய சபை தலைவர் ராசிபோஸ், ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் லெனின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரதாப் குமார் வரவேற்றார். அமைச்சர் ராஜ கண்ணப்பன் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்பு பொன் விழா மலரை வெளியிட்டு சுகாதார துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழும் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

ரூ.2,500 கோடி நிதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையக்கூடாது என்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரூ.2500 கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் முடங்கி கிடந்த திட்டங்கள் எல்லாம் இப்போது செயல் வடிவம் பெற்று மக்களுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க.மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அண்ணாமலை, பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் சண்.சம்பத்குமார், நகர் ஐ.டி பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமு யாதவ், மாவட்ட கவுன்சிலர் அருண்பிரசாத்கோவிந்தம்மாள், நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் வேணி நன்றி கூறினார்.

கூட்டுறவு வார விழா

ராமநாதபுரத்தில் கூட்டுறவு துறையின் சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார்.

பின்னர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், மகளிர் குழுக்கள் மற்றும் தனிநபர் என 1,531 பயனாளிகளுக்கு ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைத்தலைவர் வேலுச்சாமி, பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மனோகரன், துணை பதிவாளர்கள் ஜெய்சங்கர், முருகன், புஷ்பலதா, சுப்பையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்