< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல் நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல் நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
26 Jun 2022 12:13 AM GMT

தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க 25-ந்தேதி(இன்று) முதல் வரும் 30-ந்தேதிக்குள் சிறப்பு முகாம்களை நடத்த உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதற்காக https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், ஆதார் எண், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தேவை என்றும், இதில் தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட 25-ந்தேதி (நேற்று) முதல் வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி மாணவிகள் தங்கள் ஆவணங்களின் நகல்களைப் பயன்படுத்தி, கல்லூரிகள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்தனர். இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற முதல் நாளான நேற்று மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்