< Back
மாநில செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¾ கோடி மோசடி; ஒருவரிடம் போலீசார் விசாரணை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¾ கோடி மோசடி; ஒருவரிடம் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
3 Oct 2022 7:35 PM GMT

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¾ கோடி மோசடி தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் மோகன்பாபு. பி.பார்ம் படித்துள்ள இவருக்கு அரசு சுகாதார ஆய்வாளர் பணி வாங்கித்தருவதாக கூறி ஒருவர் ரூ.15 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் தான் உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இணை செயலாளராக பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நண்பர்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பி.பார்ம் படித்துள்ள மோகன்பாபுவின் மனைவிக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி அந்த நபர் ரூ.15 லட்சம் வாங்கியதாகவும், இதேபோல் மோகன்பாபு மூலம் அவரின் நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 23 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடியே 83 லட்சத்தை அந்த நபர் வாங்கியதாகவும், ஆனால் யாருக்கும் அவர் வேலை வாங்கி தரமாலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் தலைமறைவானார்.

இந்த நிலையில் மோகன்பாபுவிடம் பணம் கொடுத்த நபர்கள், அவரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து மோகன்பாபுவும், அவரது மனைவி சாருமதியும், அந்த நபரை சென்னை கோயம்பேட்டில் இருந்து காரில் பெரம்பலூருக்கு அழைத்து வந்து தங்களது வீட்டில் வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த நபரின் உறவினர்கள், அவரை மோகன்பாபு கடத்தி வீட்டில் சிறைபிடித்து வைத்திருப்பதாக பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மோகன்பாபு வீட்டிற்கு பெரம்பலூர் போலீசார் நேற்று சென்று அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அந்த நபரிடம் விசாரித்ததில், அவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது சிவகங்கை, துறையூர் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரிடம் மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்