< Back
மாநில செய்திகள்
வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
2 Oct 2023 8:46 PM GMT

வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

*முசிறி அந்தரப்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர், தனது மகனுக்கு தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறிய ஏழூர்ப்பட்டி அருகில் உள்ள உடையாளகுளம்புதூரை சேர்ந்த பழனியாண்டி மகன் பெரியசாமியிடம் ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 400 கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை என்றும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ெபரியசாமி மீது ராமசாமி முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பீர் பாட்டிலால் தாக்குதல்

*முசிறி அருகே உள்ள வீரமணிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 40). இவருக்கும், பேரூரை சேர்ந்த கனகராஜின் மகன் நந்தகுமாருக்கும்(26) பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தண்டலைப்புத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் நின்ற முருகேசனிடம், நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்த் (35), சுந்தரவேல் (26) ஆகியோர் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும், அப்போது முருகேசனை நந்தகுமார் பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த முருகேசன் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நந்தகுமார் உள்ளிட்ட 3 பேர் மீது முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்ற 2 பேர் கைது

*காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் வையம்பட்டியை அடுத்த பாத்திமாபுதூர் மற்றும் ஆர்.எஸ்.வையம்பட்டி ஆகிய பகுதிகளில் மது விற்ற மரிய இன்னாசி(39), செக்கணம் பகுதியை சேர்ந்த மருதபிள்ளை(51) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 30 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

*சோமரசம்பேட்டை வீரங்கிநல்லூர் அரிஜன தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(55). மதுவுக்கு அடிமையான இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) மதுவில் கலந்து குடித்தார். இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்சோவில் கைது

*மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக, வீ.பூசாரிபட்டியை சேர்ந்த பாலு(25) என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மணப்பாறை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நேற்று பாலுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்